2015-09-08 16:40:00

ஒப்புரவையும் அமைதியையும் வழங்க விரும்பும் இறைவன்


செப்.08,2015. கடவுளின் ஒப்புரவுப்பணி என்பது, சின்ன விடயங்களிலும், அவர் தன் மக்களோடு இணைந்து நடப்பதிலும் காணப்படுகிறது என்று, இச்செவ்வாய்க்கிழமை காலைத் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில், மக்களுக்கு ஒப்புரவையும் அமைதியையும் வழங்கவிரும்பும் இறைவன், பெரிய ஒப்பந்தங்களை உருவாக்கி, அதன்வழி செயலாக்குவதில்லை, மாறாக, சிறு சிறு விடயங்கள் வழியே, நம்முடன் மேற்கொள்ளும் பயணத்தில் அவற்றைச் செயலாக்குகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நல்லவர், கேட்டவர் என அனைவரோடும் இணைந்து இறைவன் பயணிக்கிறார், ஏனெனில், அவர் தீயவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக, மனிதகுலத்துடன் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறார் என்று திருத்தந்தை மேலும் கூறினார்.

தன் மக்களுக்கு எப்போதும் நல்லதையே நினைக்கும் கடவுள், அதன்வழி நமக்கு நம்பிக்கைகளையும் வழங்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்பு, ஒப்புரவு மற்றும் அமைதிக்காக ஒவ்வொருவரும் இறைவனிடம் வேண்டுவோம் என்ற அழைப்பையும் தன் மறையுரையில் முன்வைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.