2015-09-07 17:17:00

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் - கர்தினால் Filoni பயணம்


செப்.07,2015. இம்மாதம் 9ம் தேதி முதல், 19ம் தேதி முடிய, பங்களாதேஷ், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில், நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Fernando Filoni அவர்கள், ஒரு மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்கிறார்.

இச்செவ்வாய் பிற்பகல் உரோம் நகரிலிருந்து புறப்படும் கர்தினால் Filoni அவர்கள், புதனன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள திருப்பீடத் தூதரகத்தைச் சந்திப்பதுடன், அங்கிருந்து Omorpur மறைமாவட்டத்திற்குச் சென்று தங்குவார்.

இவ்வியாழனன்று அங்குள்ள அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் நடத்தும் நோயுற்றோர் இல்லத்தையும், வேறு பல துறவு சபையினர் நடத்திவரும் சமூகப் பணி மையங்களையும் பார்வையிடுவார்.

ஞாயிறு மாலை வரை பங்களாதேஷில் இருக்கும் கர்தினால் Filoni அவர்கள், அன்று மாலை, கொல்கத்தா சென்றடைந்து, திங்களும், செவ்வாயும் அப்பகுதியின் தலத்திருஅவை அதிகாரிகளையும், விசுவாசிகளையும் சந்தித்து உரையாடுவார்.

செவ்வாய் பிற்பகல் நேபாள நாட்டிற்குச் செல்லும் கர்தினால் Filoni அவர்கள், 19ம் தேதி, சனிக்கிழமை பிற்பகல்வரை அந்நாட்டில் திருஅவை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரையும் சந்தித்து உரையாடுவார்.

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய மூன்று நாடுகள் பயணத்தை நிறைவு செய்யும் கர்தினால் Filoni அவர்கள், 19ம் தேதி பிற்பகல் நேபாளத்திலிருந்து புறப்பட்டு, 20ம் தேதி உரோம் நகர் வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.