2015-09-05 15:54:00

பொதுக்காலம் 23ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


நலன்களைப் பெற்றுத்தரும் ஆரோக்கிய அன்னையின் விழாவைக் கொண்டாட, இலட்சக்கணக்கான பக்தர்கள், வேளை நகருக்கும், ஆரோக்கிய அன்னையின் வேறுபல திருத்தலங்களுக்கும் செல்லும் வேளை இது. இவ்வேளையில், கனத்ததோர் இதயத்துடன் அன்னை மரியாவை நாம் அண்டிவருகிறோம். திசையறியாது கடலில் சிக்கிய ஒரு கப்பலை, கரை சேர்த்தவர், வேளை நகர் அன்னை என்று நாம் அறிவோம். அண்மைய நாட்களில், ஐரோப்பிய நாடுகளைச் சுற்றியுள்ள மத்தியத்தரைக் கடலில், திசையின்றி தவிக்கும் பல்லாயிரம் மக்களைப் பற்றியச் செய்திகள், ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைந்தவண்ணம் உள்ளன. பாதுகாப்பில்லாத பயணங்களை மேற்கொள்ளும் இவர்களில், கடலுக்கு இரையானோர் பல்லாயிரம் பேர். இவர்களில் ஒருவன், சிரியா நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவன், அய்லன் குர்தி (Aylan Kurdi). துருக்கி நாட்டின் கடற்கரையில் ஒதுங்கியிருந்த இச்சிறுவனின் சடலம்,  சமூக வலைத்தளங்கள் வழியே பல இலட்சம் உள்ளங்களைக் கீறி, இரணமாக்கியது. "மனிதமே உயிரற்ற சடலமாக, கேட்பாரற்று கிடக்கிறதோ?" என்ற கேள்வி எழுந்தது. இச்சிறுவனின் மரணம், ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளது. செல்லுமிடம் ஏதுமின்றி, பாலை நிலத்திலும், கடல் அலைகளிலும் சருகுகளைப்போல் அடித்துச் செல்லப்படும் இம்மக்களை, பாதுகாப்பான இடங்களில் சேர்க்க, வேளை நகர், ஆரோக்கிய அன்னை துணைபுரிவாராக!

ஆரோக்கிய அன்னையின் விழாவுக்கு முந்திய ஞாயிறன்று இடம்பெறும்  வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கின்றன. வாழ்வின் தவிர்க்கமுடியாத எதார்த்தங்களான நோயும், வறுமையும் நம்மை வாட்டும்போது, நம் மனதில் எழும் எண்ணங்கள் என்ன? நோயுற்றோரை, வறியோரைப்பற்றி சந்திக்கும்போது, நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம்? என்ற ஓர் ஆன்மீக ஆய்வை மேற்கொள்வது, பயனுள்ள ஒரு முயற்சி. ஆரோக்கிய அன்னையின் திருநாளைக் கொண்டாடுவதற்கு முன், நமது உள்ளம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதைத் தீர்மானிக்க, இந்த ஆன்ம ஆய்வும், இன்றைய ஞாயிறு வழிபாடும், உதவியாக அமையட்டும்.

நோய், வறுமை இவற்றைப்பற்றி இஸ்ரயேல் மதத்தலைவர்கள், மிகத் தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்தவரை, நோயும் வறுமையும், பாவத்தின் தண்டனைகள். நோயுற்றோரும், வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை விட்டு, விலகியிருப்பது நல்லது. அதிலும், ஒரு சில நோய் உடையவர்களைப் பார்த்தாலோ, அல்லது அவர்கள் நிழல் கூட தம்மைத் தீண்டினாலோ, தாங்களும் தீட்டுப்பட்டவர்கள் ஆகிவிடுவோம் என்ற பய உணர்வுகளை, மதத்தலைவர்கள், மக்கள் மீது திணித்து வந்தனர்.

நோயாளி அல்லது ஏழை என்றவுடன், இவன் செய்த குற்றமா, அல்லது இவன் பெற்றோர் செய்த குற்றமா என வழக்குகள் எழுந்தன. தீர்ப்புகள் எழுதப்பட்டன. (யோவான் 9:2) நாம் வாழும் இன்றைய சமுதாயத்திலும், சாதி, அல்லது, இன அடிப்படையில் இது போன்ற முற்சார்பு எண்ணங்கள், புரையோடிப் போயிருப்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்த சமுதாய நோயை நம்மிடமிருந்து இறைவன் அகற்றவேண்டும் என்று மனமுருகி வேண்டுவோம்.

துன்பம் ஏன்? அதிலும் மாசற்றவர் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகள் மனித சமுதாயத்தை எப்போதும் தாக்கிவரும் கேள்விகள். இந்தக் கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு மாபெரும் காவியம், விவிலியத்தில் இடம்பெறும் யோபு நூல். யோபுவின் வாழ்வில் நடந்த கொடுமைகள், நம்மில் பலருக்கு நடந்திருக்கலாம். செல்வத்தையும், உடல் நலத்தையும் இழந்து தவிக்கும்போது, ஆழமானக் கேள்விகள், மனதைத் தாக்குகின்றன. இக்கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன.

முதல் வாசகத்தில் நாம் கேட்கும் எசயாவின் வார்த்தைகள், வேதனையில் ஆழ்ந்திருக்கும் ஓர் உள்ளத்திலிருந்து வெளிவரும் வார்த்தைகள். அனால் வெறும் வேதனை மட்டும் அங்கில்லை. அந்த ஆழமான வேதனையிலும், இறைவனிடம் கொண்ட விசுவாசம், அந்த வார்த்தைகளில் வெளிச்சமாகிறது.

எல்லாம் அழிந்துவிட்டது என்று விரக்தியின் எல்லைக்கு போகும்போது, மனம் பாறையாய் இறுகிப்போகும். ஆனால், அந்த பாறைக்குள்ளிருந்து சின்னதாய், நீர்த்துளிபோல் கசியும் விசுவாசம், கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, பின்னர் பாறையைப் பிளந்து கொட்டும் அருவியாய் மாறும். இத்தகைய ஓர் அருவியை, நாம் எசாயாவின் வார்த்தைகளில் உணர்கிறோம்.

புல்லை மையப்படுத்தி எழுதப்பட்ட ஓர் ஆங்கில கவிதை, எனக்கு ரொம்ப பிடித்தக் கவிதை... கதை என்றும் சொல்லலாம். அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும் போது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "துணிச்சல்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்டான். அண்ணன் தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை வைத்து தைரியத்தை விளக்கப் பார்த்தான். தம்பிக்கு விளங்கவில்லை. அப்போது, அவர்கள் நடந்து சென்ற பாதையில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலை நிமிர்ந்து, நின்று கொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் துணிச்சல்" என்றான். கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்த காட்சி நமக்கு முக்கியம்.

முற்றிலும் எரிந்துபோன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல், நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் துணிச்சல், என்னைப் பொருத்தவரை, அதுதான் விசுவாசம். இத்தகைய விசுவாசத்தை இறுகப் பற்றிக்கொண்டு, இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள இவ்வார்த்தைகள், நம் மனதில் ஆணித்தரமாய் பதிய வேண்டும்.

எசாயா 35: 4-7

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார்.” அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

கனல் கக்கும் மணல்பரப்பு, நீர்த் தடாகம் ஆகும். எசாயாவின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழுகிறது. அதுவும், இன்றையச் சூழலில், மனிதகுலம் இயற்கையை அழித்துவரும் வேகத்தைக் காணும்போது, நீர்த் தடாகம், கனல் கக்கும் மணல்பரப்பு ஆகும் என்று மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள், உள்ளத்திற்கு உத்வேகம் தரும் அழகான கற்பனை. நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்று மூடப்பட்ட வாழ்கையை, மூடப்பட்ட கல்லறையைத் திறந்து, வெளிவரும் விசுவாசக் கனவு.

ஜோ டேரியோன் (Joe Darion) எழுதிய "The Impossible Dream" அதாவது, “நடக்கவே முடியாத கனவு” என்ற பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த பாடலில் இரு வரிகளை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

To dream the impossible dream,

To be willing to march into Hell

For a heavenly cause

இந்த வரிகளை மொழிபெயர்ப்பு செய்வதை விட, இதே தொனியில் கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளை இங்கே நினைத்துப் பார்க்கிறேன். "அசையும் கொடிகள் உயரும், உயரும், நிலவின் முதுகை உரசும்" என்ற இந்த வரிகளும், நடக்க முடியாததைக் கனவுகாணும் வரிகள். துன்பத்தின் பிடியில், விரக்தியின் விளிம்பில் இருக்கும்போது நம் மனதிலும் இது போன்ற நம்பிக்கைக் கனவுகள் உதிக்கவேண்டும். எசாயாவின் விசுவாசக் கனவு நமதாக, இறைவனை வேண்டுவோம்.

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம், மிகவும் தெளிவான பாடங்களைத் தருகின்றது. ஏழைகளை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்?

பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இரக்க குணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான். மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு, உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர், ஏழைகளை மதிக்கிறோம்? இதுதான் யாக்கோபு மடலில் எழுப்பப்படும் சங்கடமான கேள்வி.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர், கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பி வந்த யூதர்கள் மத்தியில், இயேசு "வறியோர் பேறு பெற்றோர்" என்று மலை உச்சியில் சொன்னார். யூத மதத் தலைவர்களுக்கு, இயேசு சொன்னது, பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும், தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில் நம்பிக்கை பிறந்திருக்கும்.

புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று இயேசு முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவற்றை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். இன்றைய நற்செய்தியில்,  மீண்டும் ஒருமுறை, இயேசு தன்  சொல்லாலும்,செயலாலும் பல பாடங்களைப் புகட்ட வருகிறார்.

மாற்கு நற்செய்தி 7: 32

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.

என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. குறையுள்ள அந்த மனிதரை, இயேசுவிடம், மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதர் தானாகவே இயேசுவிடம் வரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, தன்னை ஒரு குற்றவாளி என்றும், கடவுளின் தண்டனையை அனுபவிப்பவர் என்றும், முத்திரை குத்திய யூத மதத் தலைவர்கள் மேல், அவர் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். இயேசுவையும், அத்தலைவர்களில் ஒருவராக நினைத்து, அவரை அணுக, தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளை உருவாக்கி, அவற்றில், தன்னையே பூட்டிக்கொண்டவர் இந்த நோயாளி. அவருடைய ஒரு சில நண்பர்கள், அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இயேசுவிடம் அவரைக் கொண்டு வந்தனர். முடக்குவாதத்தால் கட்டிலிலேயே முடங்கிப் போன ஒருவரை, அவரது நண்பர்கள் இயேசுவிடம் கொணர்ந்ததை (லூக்கா 5: 18-25) இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து அவருடைய நண்பர்கள் இதைச் செய்தனர். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, இயேசு முடக்குவாத முற்றவரைக் குணமாக்கினார்  என்றும் நாம் வாசிக்கிறோம். (லூக்கா 5: 20)

நோயுற்றோரை, குணமாக்குவது ஓர் அற்புதம் என்றால், அவர்களை, மனிதர்களாக மதித்து நடத்துவது, வேறொருவகையில் ஓர் அற்புதம்தான். அவர்கள் குணமாகவில்லை எனினும், தாங்களும் மதிப்பிற்குரிய மனிதர்கள் என்ற ஓர் உணர்வை அவர்கள் பெறுவதே, ஓர் அற்புதம்தான்.

நான் கல்லூரியில் பணியாற்றியபோது, இத்தகைய ஓர் அற்புதத்தை, தினம், தினம் பார்த்தவன். போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஓர் இளைஞனை அவரது நண்பர் தினமும் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வருவார். அவர் வகுப்புகள் நடந்த கட்டடத்தில் லிப்ட் வசதி இல்லாததால், இந்த நண்பன் அவரைக் குழந்தையைப் போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு இரண்டு மாடிகள் ஏறுவார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

வாய் பேசாத, காது கேளாத மனிதரை இயேசுவிடம் அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது.

மாற்கு நற்செய்தி 7: 33-35

இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

 

இயேசுவின் செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும்போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது இதுதான்: "உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச்செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. 'எப்பத்தா' உன் சிறைகள் திறக்கபடுக."

இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசு நம்மை கட்டவிழ்த்ததால், நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்வோம்.

சிறப்பாக வறுமை, பிணி இவற்றில் நாம் சிக்கியிருக்கும்போதும், இந்தச் சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நமதாக்குவோம். இல்லாதது, முடியாதது என்று ஒன்றும் நம்மை சிறைப் படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால்,  பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இறை மகனும், ஆரோக்கிய அன்னையும் நமக்குத் துணை புரிவார்களாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.