2015-09-02 15:50:00

வத்திக்கானில், படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள் வழிபாடு


செப்.02,2015. நன்மையானவற்றைச் செய்யும் பணியில் நாங்கள் முழுமையாக ஈடுபடுவதற்குரிய புத்துணர்வைப் பெற, இறைவா, உமது ஆசீர் எங்களில் செயலாற்றுவதாக என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசீராக இச்செவ்வாய் மாலையில் வழங்கினார்.

படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள், கத்தோலிக்கத் திருஅவையினரால் முதல் முறையாகச் சிறப்பிக்கப்பட்டபோது, அந்த முயற்சியின் ஓர் அங்கமாக, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில், இச்செவ்வாய் மாலை 5 மணியளவில் நடைபெற்ற இறைவார்த்தை வழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை இவ்வாசீரை வழங்கினார்.

இறைவாக்கினர் தானியேல் நூலில் காணப்படும் புகழ்பாடல், மத்தேயு நற்செய்தியின் ஒரு பகுதி, மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலின் ஒரு பகுதி ஆகியவை இந்த மாலை வழிபாட்டில் வாசிக்கப்பட்டன.

திருத்தந்தையின் இல்ல மறையுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள கப்பூச்சியன் துறவியான அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், வாசிக்கப்பட்ட வாசகங்களின் அடிப்படையில், மறையுரை வழங்கினார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையினரால் செப்டம்பர் முதல் தேதி கடைபிடிக்கப்படும் படைப்பைப் பாதுகாக்கும் உலக நாள், கத்தோலிக்கத் திருஅவையினரால் முதல் முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.

முதல் முறையாகச் சிறப்பிக்கப்பட்ட இந்த வழிபாட்டு முயற்சியில், திருப்பீடத்தின் அனைத்து அதிகாரிகளும், ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளும், இன்னும், திருப்பீடத்தில் பணியாற்றும் பல நாட்டுத் தூதர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.