2015-08-28 15:17:00

ஏழைக் குடும்பங்களிடம் எப்போதும் மனத்தாராளம் காட்டுவோம்


ஆக.28,2015. “ஆண்டவரே, நாங்கள் எப்போதும் தாராள மனத்துடன் இருந்து, ஏழைக் குடும்பங்களுக்கு நெருக்கமாக இருக்க உதவியருளும்” என்ற செய்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குர்திஸ்தானில் புலம்பெயர்ந்து வாழும் ஈராக்கியர்களுக்கு மேய்ப்புப்பணி ஆற்றிவரும் அருள்பணி Samir Yousif அவர்கள், ஈராக் போரில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அடங்கிய புகைப்பட ஆல்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் காண்பித்தார்.

கடந்த புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தையை சந்தித்துப் பேசிய அருள்பணி Yousif அவர்கள், ஈராக் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு, கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்கள் வழியாக திருத்தந்தை ஆற்றி வரும் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.

மேலும், திருத்தந்தையைச் சந்தித்தது குறித்து ஊடகங்களிடம் பேசிய அருள்பணி Yousif அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். அரசின் அறிவற்ற செயல், கண்மூடித்தனமான வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது, அதனால் வெற்றிபெற இயலாது என்று தெரிவித்தார்.

தற்போது வன்முறைகள் இடம்பெற்று வந்தாலும், அமைதி, ஒப்புரவு மற்றும் நீதி நிறைந்த எதிர்காலம் அமையும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார் அருள்பணி Yousif.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.