2015-08-28 15:24:00

இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்


ஆக.28,2015. வருகிற டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் இறைவனின் இரக்கத்தைப் பரப்புவதற்கென, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை அனுப்பவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரவிருக்கும் திருநீற்றுப் புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாட்டில், திருத்தந்தை இந்த மறைப்பணியாளர்களை அனுப்புவார் என்று, நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவை கூறியது.

இரக்கத்தின் மறைப்பணியாளர்களாகப் பணியாற்ற விரும்பும் அருள்பணியாளர்கள் விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வருகின்றனர் என்றும், திருப்பீடம் பாவ மன்னிப்பு வழங்குவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாவங்களையும்கூட மன்னிக்கும் அதிகாரத்தை இந்த அருள்பணியாளர்கள் கொண்டிருப்பார்கள் என்றும் இத்திருப்பீட அவை கூறியது.

வானகத்தந்தையின் மன்னிப்பைத் தேடும் அனைவருக்கும் வரவேற்பளிக்கும் உயிருள்ள அடையாளங்களாகவும், இரக்கத்தைத் தூண்டும் போதகர்களாகவும், மன்னிப்பின் மகிழ்வை அறிவிப்பவர்களாகவும் இந்த மறைப்பணியாளர்கள் இருப்பார்கள் என்றும் இத்திருப்பீட அவை கூறியது.

இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டில் ஆயர்கள் தங்களின் மறைமாவட்டங்களில் இந்த மறைப்பணியாளர்களை அழைத்து ஒப்புரவு அருளடையாளத்திற்குச் சிறப்புக் கவனம் செலுத்துவார்கள் என்றும், நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவை கூறியது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.