2015-08-21 15:23:00

பங்களாதேஷில் சிறார் கொலைகளுக்கு நீதி கேட்டு கிறிஸ்தவர்கள்


ஆக.21,2015.  பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் குற்றக் கும்பல்களால் நான்கு சிறார் கொல்லப்பட்டுள்ளதற்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இவ்வியாழனன்று டாக்காவில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், வலுவற்ற சிறாரைப் பாதுகாப்பதற்கும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறிய கிறிஸ்தவர்கள் இறந்த சிறாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபித்தனர்.

பங்களாதேஷில் சிறாரைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இருக்கின்றபோதிலும், அச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றுரைத்த, அந்நாட்டு ஆயர் பேவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருள்பணி ஆல்பர்ட் தாமஸ் ரொசாரியோ அவர்கள், அரசின் புறக்கணிப்பு, அப்பாவிச் சிறாரின் எதிர்காலத்தை அழிக்கின்றது என்று தெரிவித்தார்.

கைபேசியைத் திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கடந்த திங்களன்று, முகமது ராஜா என்ற 17 வயது நிரம்பிய சிறுவனை மூன்று பேர் சேர்ந்து அடித்தே கொலை செய்துள்ளனர். பங்களாதேஷில் கடந்த ஐந்து வாரங்களில் நான்கு சிறார் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.