2015-08-21 15:18:00

இந்தியா-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ்


ஆக.21,2015. இந்தியாவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்திய காரித்தாஸ் நிறுவனம் உதவி வருகின்றது.

இந்தியாவின் வட கிழக்கிலுள்ள அசாம் மாநிலத்தில் 280 கிராமங்களும், 12 ஆயிரம் ஹெக்டர் சாகுபடி நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள வேளை, இவ்விடங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு காரித்தாஸ் நிறுவனம் உதவி வருகின்றது.

இது குறித்துப் பேசிய இந்திய காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி ஃபிரெட்ரிக் டி சூசா அவர்கள், உலகம் வெப்பமடைந்து வருவதால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெள்ளத்தால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், கடந்த ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலமற்ற சேவையாற்றிய நிவாரணப் பணியாளர் Altaf Hussain Lone   அவர்களைக் கவுரவித்துள்ளது இந்திய காரித்தாஸ்.

காரித்தாஸ் நிறுவனத்தோடு முதன்முறையாக சேர்ந்து பணியாற்றிய Altaf Hussain Lone அவர்களுக்கு ஒரு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டது என்று அருள்பணி டி சூசா அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 19, கடந்த புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனிதாபிமான நாளன்று இவ்விருது வழங்கப்பட்டது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.