2015-08-21 15:04:00

அசிசி நகரில் இரண்டாவது பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம்


ஆக.21,2015. அசிசி நகரில், பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம் இரண்டாவது முறையாக வருகிற செப்டம்பர் 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும் என்று திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் அறிவித்துள்ளார்.

வருகிற செப்டம்பரில் அசிசி நகரில் நடைபெறும் பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் ரவாசி அவர்கள், சந்தேகம், அச்சம், மோதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் மனித சமுதாயத்திற்கு உரையாடல் மிகவும் இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.

இவ்வாண்டு நடைபெறும் இந்தப் புறவினத்தார் மன்றம், மனிதர் என்ற தலைப்பில் இடம்பெறும் என்றும், மத நம்பிக்கையாளர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் ஆகிய இரு குழுக்களுக்கிடையே உரையாடலும், இக்குழுவினர் இறைவனை எப்படிப் பார்க்கின்றனர் என்பது பற்றிய பகிர்வுகளும் இடம்பெறும் என்றும் கர்தினால் ரவாசி அவர்களின் அறிக்கை கூறுகின்றது.

இந்நாள்களில் கருத்தரங்குகள், பயிற்சிப் பாசறைகள், பகிர்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும் என்றும், இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 2012ம் ஆண்டில் அசிசியில், முதல் பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம் நடைபெற்றது என்றும் கர்தினால் ரவாசி அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.