"நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா?" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” – Giles Duley)
இந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர் Giles Duley என்ற 44 வயது மனிதர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும், இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை, இந்தியத் திருஅவை, ‘நீதி ஞாயிறு’ என கடைபிடித்து வருகிறது. ஆகஸ்ட் 16, இஞ்ஞாயிறன்று, நீதி ஞாயிறைக் கடைபிடிக்கும் வேளையில், Giles Duley பற்றி பேசுவது எனக்குப் பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் பேசியதைக் கேட்டபோது, நீதி ஞாயிறுக்குரிய மறையுரையைக் கேட்டதுபோல உணர்ந்தேன்.
Giles Duley ஒரு புகைப்படக் கலைஞர். பத்தாண்டுகளுக்கும் மேலாக 'பேஷன்' (fashion) உலகில் புகைப்படங்கள் எடுத்துவந்தவர். விலைஉயர்ந்த உடைகள், நகைகள், காலணிகள், ஆகியவற்றை விளம்பரம் செய்யும் அழகான, ஆடம்பரமான மனிதர்களுடன் வாழ்ந்தவர். அந்தப் பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த செயற்கையான, பளபளப்பான உலகம், இவருக்குச் சலிப்பைத் தரத் துவங்கியது. அந்த செயற்கை உலகிற்கே உரிய ஆணவம் கொண்டவர்களுடன் பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பும் கசப்பும் நாளுக்கு நாள் கூடிவந்தது.
ஒரு நாள் இரவு, இப்படி ஒரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த காமிராவை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ‘ஸ்ப்ரிங்’ கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, படுக்கையில் விழுந்து, துள்ளி, சன்னல் வழியே வெளியே விழுந்தது. இவருக்கு அதுவரை வாழ வழிகாட்டி வந்த காமிரா, இவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சன்னல் வழியே விடைபெற்றுக் கொண்டது. அந்த நொடிப்பொழுதில் தன் வாழ்வுப் பாதையில் முக்கியமான ஒரு திருப்பம் ஏற்பட்டது என்று Giles கூறுகிறார்.
அந்த இரவுவரை செயற்கையான விளம்பர உலகை தன் காமிராக் கண்களால் கண்டுவந்த Giles, அடுத்தநாள் முதல், இயற்கையான உலகை, தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். செயற்கை ஏதுமில்லாத அந்த உலகில் அவர் கண்ட உண்மைகளை, புகைப்படங்களாய் பதிவுசெய்தார். குறிப்பாக, உலகின் கண்களில் விழும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, காமிரா வழியே படம் எடுக்க முடிவு செய்தார்.
அந்த முடிவு, இவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, இவர் வாழ்வில் மீண்டும் ஒரு மிகப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்த அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படங்களாகப் பதிவுசெய்து கொண்டிருந்தார் Giles. அப்போது ஒரு நாள், நிலத்தடியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியை இவர் மிதித்தால், இரு கால்களையும், இடது கையில் பாதியையும் இழந்தார். இது நடந்தது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று, தன் பணியைத் தொடர விரும்பியதால், அடுத்த பத்து மாதங்களில், 30க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளுக்கு, Giles, தன்னையே உட்படுத்திக் கொண்டார்என்று இவரது மருத்துவர் கூறியுள்ளார். இப்போது, Giles, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார். இவர் Ted.com இணையதளம் வழியாகப் பேசியதில் ஒரு பகுதியைத்தான் நான் நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரை என்று சொன்னேன். இவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்களில் சில, இதோ:
“புகைப்படக் கலைஞனாய் இருந்தவரை, மற்றவர்களையே நான் படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட, என் உடலே ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை என் கதையில் சொல்கிறேன்.”
Giles கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?
“உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.
அங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல,
நீங்கள்.
எந்நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும்
உங்களால் செய்யமுடியும்.
இந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை நான் பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை எனக்குப் புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவற்றை, இப்போது நான் அடைந்துள்ளேன்.”
இவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் Giles, மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராட்டங்களை மேற்கொள்ளும் இவருக்கு, சிலநாட்களில் காலை விடியும்போது, கால்களை எடுத்து மாட்டிக்கொண்டு படுக்கையைவிட்டு இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இதைத்தான் இந்தச் சிந்தனையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்டேன். 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வுடன் Giles போராடியிருக்கிறார்.
இத்தனை போராட்டங்கள் மத்தியிலும், Giles, தான் செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: "நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவற்றைக் கண்டு, நம்பிக்கையிழந்து, நொறுங்கிப்போகாமல், அந்த அவலங்களைப்பற்றி பேசுவோம்; கருத்துக்களைப் பரிமாறுவோம்; மாற்றங்கள் பிறக்க வழிகள் தெளிவாகும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்பதே, இவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம். இந்தப் பாடத்தையே, நீதி ஞாயிறின் மையப் பொருளாக நான் எண்ணிப்பார்க்க விழைகிறேன்.
நீதி ஞாயிறு என்றதும், கொடி பிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இந்த வெளிப்படையான முயற்சிகளுடன், நமது நீதித் தேடல் முடிந்துவிட்டால், பயனில்லை. வெளிப்படையான இந்த செயல்பாடுகளால் மட்டும் நீதி, ஒரு ஞாயிறாக உதிக்கப் போவதில்லை.
நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது செயல்களில் நீதி வெளிப்படவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப் பற்றி, வறியோரைப் பற்றி வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே!
நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்து ஆரம்பமாக வேண்டுமா? வெளியிலிருந்து ஆரம்பமாக வேண்டுமா? என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள், நம்மில் அதிகம் பேர் உள்ளனர். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.
வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, குண்டுகள் வீசுவதையும், கட்சிகள் சேர்ப்பதையும் நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு, ஒப்புக்காக மருந்திட்டு, கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு இவ்விதம் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் இந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது, கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
அப்பங்களையும், மீன்களையும் இயேசு பலுகச்செய்தபோது, வயிறார உண்டவர்கள், இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன்? அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம், அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அந்தச் சமதர்ம சமுதாயத்தை, இயேசு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். சமதர்ம சமுதாய மாற்றத்தை, மிக எளிதாக உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். “அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் அழைத்து வரவில்லை” என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன் மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு, ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார்.
அவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார். சதை, இரத்தம் என்ற இந்த வார்த்தைகளே அந்த மக்களை நிலைகுலையச் செய்கின்றன. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே... என்று அவர்கள் தடுமாறுகின்றனர். இருந்தாலும், இயேசு அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்: "என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்."
வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும், ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக, மீதமும் இருக்கும்" என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் சொல்ல முயல்கிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும், இயேசு, இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன?
ஆகஸ்ட், 15, இந்தியாவில் 69வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். ஆகஸ்ட், 17, இலங்கையில், பொதுத் தேர்தல்களை எதிர்நோக்கி, காத்திருக்கிறோம். இவ்விரு நாடுகளிலும், நீதி ஞாயிறு, ஒளிவீசிட இறைவனை இறைஞ்சுவோம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |