2015-08-13 16:04:00

சோதனை நேரங்களில் நமது புகலிடம், மரியன்னை - திருத்தந்தை


ஆக.13,2015 "மரியன்னை அருள் நிறைந்தவராக இருக்கிறார். சோதனை நேரங்களில் நமது நிச்சயமான புகலிடமாக இருக்கிறார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, இவ்வியாழனன்று வெளியாயின.

@Pontifex என்ற முகவரியின் உதவியுடன், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துகீசியம், அரேபியம், இலத்தீன், போலந்து ஆகிய ஒன்பது மொழிகளில் திருத்தந்தை தன் Twitter செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

அன்னை மரியாவை மையப்படுத்தி, ஒவ்வோர் ஆண்டும், அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வரும் திருத்தந்தையின் Twitter பக்கத்தை, 67 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்வமாகத் தொடர்ந்து வருகின்றனர் என்று அண்மைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

'இறைவா உமக்கே புகழ் : நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய திருமடல் வெளியான ஜூன் 18ம் தேதியன்று, 20 நிமிடங்களுக்கு ஒரு Twitter செய்தியை திருத்தந்தை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தன் திருத்தூது பயணங்களை மேற்கொள்ளும் வேளைகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் செல்லும் நாடுகளில் பேசப்படும் மொழிகளிலும் Twitter செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.