2015-08-11 15:15:00

கடுகு சிறுத்தாலும்... பார்வையற்ற ஒளியில் பாய்மரம் விரித்தவர்


மாணவர் விடுதி ஒன்றில், பார்வை இழந்த ஒரு மாணவர் புதிதாகச் சேர்ந்தார். அவரைக் கரம்பிடித்து அழைத்துச் செல்ல, நல்ல உள்ளங்கள் பலர் விடுதியில் இருந்ததால், சில மாதங்களில், அவர், கல்லூரி, விடுதி என்று, பழக்கப்பட்ட இடங்களிலெல்லாம், எந்தத் துணையும் இல்லாமல் தானாகவே சென்றார். ஒரு நாள், விடுதியில், இரவு உணவு நடைபெற்ற நேரத்தில், மின் தடை ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தபோது, பார்வை இழந்த இவர் மட்டும் தயக்கமின்றி எழுந்து, தன் நண்பர்களை அந்த இருளில் உணவு அரங்கத்திலிருந்து வழி நடத்திச் சென்றார்.

பார்வைத் திறன் அற்றோரும் பாதை காட்ட முடியும் என்பதற்கு, உலகப் புகழ்பெற்ற ஹெலன் கெல்லர் (Helen Keller) அவர்கள், தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டு. குழந்தைப் பருவத்தில் வந்த ஒரு நோயினால், பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்த ஹெலன், பேசும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியாமல் தவித்தார். இருப்பினும், ஆன் சல்லிவன் (Anne Sullivan) என்ற ஓர் அற்புத பெண்ணால் இவர் வழிநடத்தப்பட்டார். கல்லூரிப் படிப்பை முடித்து, பட்டம் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி என்ற வரலாற்றை உருவாக்கிய ஹெலன் கெல்லர் அவர்கள், பார்க்கும் திறன் பற்றி கூறியுள்ளது சிந்திக்க வேண்டியது:

"பார்க்கும் திறன் பெற்ற பலருடன் நான் பயணிக்கிறேன். ஆனால், அவர்கள் கடலிலும், வானிலும் எதையும் காண்பதில்லை. வெறும் பார்க்கும் திறன் பெற்றதால் திருப்தியடைந்துவிடும் இவர்களைவிட, பார்வையற்ற ஒளியில் நான் பாய்மரம் விரித்துச் செல்வது எவ்வளவோ மேல்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.