2015-08-06 16:30:00

திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் - 37ம் ஆண்டு நினைவு


ஆக.06,2015. 37 ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் 6ம் தேதி இறையடி சேர்ந்த திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்களின் நினைவாக, இவ்வியாழன் காலை வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள கெபியில் அல்பானோ ஆயர், Marcello Semeraro அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்.

இத்தருணத்தையொட்டி, 6ம் பவுல் நிறுவனத்தின் தலைவரான, அருள்பணி Angelo Maffeis அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களிடமிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெருமளவு உத்வேகம் பெற்றுவருகிறார் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள, "இறைவா உமக்கே புகழ்" என்ற அண்மையத் திருமடலில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முன்னேற்றம் குறித்து பேசியிருப்பது, மக்களின் முன்னேற்றம் என்று பொருள்படும் "Populorum Progressio" என்ற திருமடலில், அருளாளர் 6ம் பவுல் அவர்கள், கூறியிருக்கும் ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்பதன் எதிரொலியாக நாம் காணலாம் என்று அருள்பணி Maffeis அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

வருகிற செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா.அவையில் உரை வழங்கவிருப்பதைக் குறித்து எண்ணிப்பார்க்கும்போது, ஐ.நா. அவையில் முதல் முதலாக உரையாற்றியவர், திருத்தந்தை 6ம் பவுல் என்பதையும் மறக்க இயலாது என்று அருள்பணி Maffeis அவர்கள், எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.