2015-08-05 15:51:00

கொலம்பஸ் தளபதிகளுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


ஆக.05,2015. திருமணம், குடும்பம் என்ற உண்மைகளின் உயர்ந்த விழுமியங்களை, கிறிஸ்தவக் கண்ணோட்டத்துடன் உலகிற்குப் பறைசாற்றிவரும் கொலம்பஸ் தளபதிகளின் (Knights of Columbus) பணிகளை, திருத்தந்தை பாராட்டுகிறார் என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு வாழ்த்துச் செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 4, இச்செவ்வாய் முதல், ஆகஸ்ட் 6, இவ்வியாழன் முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின், பிலடெல்பியா நகரில் நடைபெறும் கொலம்பஸ் தளபதிகளின் 133வது ஆண்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் சார்பில், கர்தினால் பரோலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

பிலடெல்பியா நகரில், அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் குடும்பங்களின் அகில உலக மாநாட்டிற்கு திருத்தந்தை வருகை தரவிருப்பதைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், கொலம்பஸ் தளபதிகளின் கூட்டம், அந்த மாநாட்டிற்கு தகுந்த ஒரு தயாரிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

'படைப்பவர், வாழ்வையும், விடுதலையையும் வழங்குகிறார்' என்ற தலைப்பில், கொலம்பஸ் தளபதிகளின் ஆண்டுக் கூட்டம் நடைபெறும் வேளையில், வாழ்வையும், விடுதலையையும் ஆதரிப்பதற்கு அமெரிக்காவில் எழுந்துள்ள பல்வேறு தடைகளையும் எதிர்த்து, கத்தோலிக்கர்கள் வாழவேண்டிய சவாலைக் குறித்தும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.