2015-08-03 17:01:00

மத்தியக்கிழக்குடன் பிரான்ஸ் கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு


ஆக.03,2015. மத்தியக்கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, இம்மாதம் 15ம் தேதி, பிரான்சிலுள்ள கத்தோலிக்கக் கோவில்கள் அனைத்தும், நண்பகலில் மணியோசை எழுப்பத் தீர்மானித்துள்ளன.

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு மறைமாவட்டங்களிலும் உள்ள கத்தோலிக்கர்கள், தங்கள் ஆயர்களுடன் ஒன்று சேர்ந்து, அன்னை மரியின் விண்ணேற்பு விழாவாகிய 15ம் தேதியன்று, நண்பகலில், மத்தியக்கிழக்கு கிறிஸ்தவர்களுக்காக செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளனர், பிரான்ஸ் ஆயர்கள்.

மத்தியக் கிழக்கில், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்கள், சிறப்பான விதத்தில் நினைவுகூரப்படவேண்டும் என விண்ணப்பிக்கும் பிரான்ஸ் நாட்டு ஆயர்கள், நாட்டுக்குள்ளேயே வாழும் மக்களிடையே எழுப்பப்பட்டுள்ள பிரிவினைச் சுவர்கள் அகற்றப்பட வேண்டும் என செபிக்குமாறும் வேண்டியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.