2015-08-03 17:18:00

இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஐநா உதவி


ஆக.03,2015. இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட, அந்நாட்டுக்கு அதிக அளவிலான தொழில்நுட்பம், மற்றும், நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐ.நா. கூறியது.

நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசும், இலங்கை மக்களும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா உதவும் என்றும், வடமாநில முதலமைச்சர் கேட்டதற்கு இணங்க, அங்கு, தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை ஐ.நா. செய்யும் என்றும், சமாதான முயற்சிகளில் வடமாநில மக்களை, நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கான உதவிகளும் அதில் அடங்கும் என்றும் கூறினார் ஐ.நா. அதிகாரப்பூர்வப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும், மனித உரிமைகளை அங்கு மேம்படுத்தவும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் நிலையை அகற்றவும், சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த நிதி  பயன்படும் என்று ஸ்டீபன் டுஜரிக் மேலும் கூறினார்.

அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தவும், நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஏற்கனவே பத்து இலட்சம் டாலர்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். 

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.