2015-08-03 16:44:00

இலங்கை ஆயர்கள் : கட்சியை நோக்காது தகுதியை நோக்குங்கள்


ஆக.03,2015. இம்மாதம் 17ம் தேதி இலங்கையில் இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியை மட்டும் நோக்காமல், வேட்பாளர்களின் தகுதியையும் நோக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவுச்செய்யுமுன்னர்  இக்காலத் தலைமுறை, மற்றும் வருங்கால தலைமுறைகளின் நல்வாழ்வை ஒருமுறை எண்ணிப் பார்த்து அதற்கியைந்த வகையில் செயல்படவேண்டும் என, இலங்கை ஆயர்கள், தங்கள் அறிக்கையில், அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்விப் பின்னணி, பொது நாகரீகம், நேர்மை, சட்டம் ஒழுங்கிற்கு மதிப்பு, போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என மக்களைக் கேட்டுள்ள ஆயர்கள், வாக்களிப்பதற்கான குடிமக்களின் அடிப்படை பொறுப்புணர்வையும் வலியுறுத்தியுள்ளனர்.

தகுதியான நபர்களையே அரசு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, மீண்டும் மீண்டும் வலியுறுத்திவரும் இலங்கைத் திருஅவை, இதற்கென, மறைமாவட்ட அளவில், விழிப்புணர்வுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.