2015-07-29 16:09:00

கடுகு சிறுத்தாலும்.... : எளிமையே அவரின் அணிகலன்


அந்த மாணவர் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளவயதிலேயே படிக்க வசதியில்லாமல் சிறுசிறு  வேலைகளைச் செய்து படிப்பைத் தொடர்ந்தவர். உயர் கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தபோது, இவரின் சகோதரி த‌ன் நகையை விற்று பணம் கொடுத்தார். இவர் மேற்படிப்பை மேற்கொண்டிருந்தபோது, இயற்கை சீற்றம் காரணமாக, தந்தையின் சிறுதொழிலும் பாதிக்கப்பட்டதால், ஊருக்கு அவசரமாக திரும்பவேண்டிய நிலை. ஊருக்குத் திரும்ப பணம் இல்லாததால், தன் புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்காரரிடம் எடுத்துச் சென்றார். நன்றாகப் படிக்கிற ஒரு மாணவனுக்கு இப்படி ஒரு நிலையா என வருத்தமுற்ற அந்த பழைய பேப்பர் கடைக்காரர், அவரின் புத்தகங்களை வாங்க மறுத்து, அவரின் பயண செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார். அந்த மாணவரின் வாழ்வு முழுவதும் மறக்கமுடியாத சம்பவம் அது. அதன்பின் எத்தனையோ உயர் பதவிகளை வகித்தாலும் அந்த மாணவர்,  பேப்பர்காரரை என்றும் நன்றியோடு குறிப்பிடுவார். ஒருமுறை இவரின் ஏவுகணை வெற்றியைத் தொடர்ந்து அந்த நாட்டு பிரதமரே இவரைச் சந்திக்க விரும்பியபோது, இவர் தன் சக அறிவியலாளரிடம் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? 'பிரதமரைச் சந்திக்கச் செல்ல, என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே”என்பதேயாகும். ஒருமுறை ஏழ்மையில் வாடிய, அதேவேளை மிகுந்த புத்திசாலியான ஓர் இராஜஸ்தான் மாணவனைச் சந்தித்தார் நம் இந்த ஏவுகணை அறிவியலாளர். நல்ல திறமையிருந்தும் அந்தச் சிறுவன், ஏழ்மையால் மனம் தளர்ந்து சோம்பிப் போயிருந்தான். அவனுடன் சில நிமிடங்கள் தனிமையில் பேசி அவன் மனதை மாற்றி நம்பிக்கையை ஊட்டினார் இவர். அதனால் அந்த சிறுவன் தன் பெயரை மாற்றி இந்த அறிவியலாளரின் பெயரை வைத்துக் கொண்டான்.

இந்த அறிவியலாளர், அரசின் உயர் பதவியை வகித்தவர் என்பதால் இவருக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இவருக்குப் பாதுகாப்பாக முன்னால் சென்ற வாகனத்தில் ஒரு பாதுகாப்பு வீரர் துப்பாக்கியை ஏந்தியபடி நின்றுகொண்டே வந்தார். இவர் தன் உடன் பயணிகளிடம், ‘அவரை உட்காரச் சொல்லுங்கள், அவருக்கு கால் வலிக்கும்’ என சொல்லிப் பார்த்தார். ஆனால் கடைசிவரை அந்தச் செய்தி, முன் வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களுக்குச் சென்றடையவில்லை. சேர வேண்டிய இடம் சென்றடைந்தவுடன், இந்த அறிவியலாளர் அந்த வீரரை அழைத்து,  கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். அவர் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார். இது நடந்தது அந்த முன்னாள அரசுத்தலைவர் இறப்பதற்கும் சில மணித்துளிகளுக்கு முன்னால். ஒருமுறை தன் முன்னாள் மாணவரிடம், அறிவியளாளரும் முன்னாள் அரசுத்தலைவருமான இவர் கேட்டார், 'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’ என்று. அந்த மாணவரோ,‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், அறிவியலாளர், எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இப்படி எதை எனச் சொல்லுங்கள்!’ என அவரிடமே திரும்பக் கேட்டடார்.

'ஆசிரியராக’என்று அடக்கமாகப் பதில் சொன்னார் அந்த அறிவியல் மேதை அப்துல் கலாம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.