2015-07-24 16:27:00

கடுகு சிறுத்தாலும் : வெற்றிக்கனி நம் கையில்தான்


கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோதிடர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்”என்று சொன்னார். கிருஷ்ண தேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவானே என்று, தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோதிடரை நோக்கி, எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்”என்றார் ஜோதிடர். தெனாலிராமன் சட்டென வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டார். ஜோதிடரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்”என்று அலறினார். “அவ்வளவுதான் மன்னா ஜோதிடம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோதிடத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்”என்று புன்னகைத்தார் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.

நாம் தீர்மானமாக இருந்தால், கோள்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.