2015-07-23 16:19:00

வறுமை ஒழிப்பு உலகின் மிகப்பெரிய சவால்


ஜூலை,23,2015. வறுமை ஒழிப்பு உலகின் மிகப்பெரிய சவால் என்று, 2015ம் ஆண்டுக்குப் பின்னான ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் பற்றிய இறுதி வரைவுத் தொகுப்பு ஏற்றுக்கொண்டிருப்பது, வரவேற்கத்தக்கது என்று ஐ.நா. கூட்டம் ஒன்றில் கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

2015ம் ஆண்டுக்குப் பின்னான ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் பற்றிய இறுதி வரைவுத் தொகுப்பு பற்றிய ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனித சமுதாயத்தை வாட்டும் வறுமையின் அனைத்து வடிவங்களிலிருந்தும் அதனை விடுதலை செய்வதற்கு இந்த வரைவுத் தொகுப்பில் உறுதி கூறப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அதேவேளை, வறுமை ஒழிப்பு, ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளில் முதலிடத்தில் இருக்க  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் அவுசா.

ஐ.நா.வின் இந்த இறுதி வரைவுத் தொகுப்பு உலகளாவிய இயல்பைக் கொண்டது, எனவே இது யாரையும் ஏமாற்றாமல், எந்தப் பிரிவினையையும் ஏற்படுத்தாமல் அனைவரையும் செயலில் இறங்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.