2015-07-23 16:09:00

பிரித்தானிய திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவாக திருத்தந்தை


ஜூலை,23,2015. “நோயாளிகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் உதவி செய்பவர்,    நம் மத்தியில் உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பிரசன்னமாயிருக்கும் கிறிஸ்துவின் சதையைத் தொடுகிறார்”என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவையில், வருகிற ஞாயிறன்று  மனித வாழ்வுக்கு ஆதரவான நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பிரிட்டன் திருப்பீடத் தூதருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளும் எல்லாருக்கும் தனது ஆசிரை வழங்கியுள்ளார்.

மனித வாழ்வு, தாயின் உதரத்தில் கருவான நேரம் முதல், அது இயற்கையான மரணம் அடையும்வரை, ஒவ்வொரு மனிதரின் மாண்பை எந்த வழியிலும் ஊக்குவிக்க உழைக்கும் அனைவரையும் தனது செய்தியில் ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை, 26 வருகிற ஞாயிறன்று, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவையில் மனித வாழ்வுக்கு ஆதரவு நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.