2015-07-15 18:24:00

விடுமுறை முடிந்து வத்திக்கான் திரும்பிய முன்னாள் திருத்தந்தை


ஜூலை,15,2015. திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கொந்தோல்போவில் கடந்த இருவாரங்களாக, ஓய்வெடுத்துவந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜூலை 14, இச்செவ்வாயன்று வத்திக்கானுக்குத் திரும்பினார்.

முன்னாள் திருத்தந்தையின் வருகையால் தங்கள் நகரம் ஆசீர் பெற்றதென்று,  காஸ்தல் கொந்தோல்போவின் நகர மேயர், Milvia Monachesi அவர்கள் தன் வழியனுப்பு உரையில் குறிப்பிட்டார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், காஸ்தல் கொந்தோல்போவில் தங்கியிருந்த வேளையில், ஜூலை 6ம் தேதி, போலந்து நாட்டின், Krakowவின் 2ம் யோவான் பவுல் பாப்பிறை பல்கலைக் கழகத்தின் சார்பாகவும், அந்நகரின் இசைச் சங்கத்தின் சார்பாகவும் இரு கௌரவ முனைவர் பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

Krakow பேராயர், கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, காஸ்தல் கொந்தோல்போவில் சந்தித்து, இந்த பட்டங்களை வழங்கினார். 

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.