2015-07-14 16:20:00

கடுகு சிறுத்தாலும் : நீயே முயற்சி செய்யாவிட்டால்...


ஒருநாள் ஒருவர், தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவர் மனமுருக வேண்டினார். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும் அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தார். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவர் நினைத்திருந்த அச்சக்கரம் பள்ளத்திலிருந்து எளிதாக எழுந்து விட்டது. தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கர் அச்சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்தது. வழிப்போக்கரை வணங்கிய அவர், "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீர் செய்து விட்டீர்!" என்றார். அதற்கு அந்த வழிப்போக்கர் "கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு தன் வழியே நடந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.