2015-07-07 16:15:00

Guayaquil நகரத்தில் சேவியர் இயேசு சபை மையத்தில் திருத்தந்தை


ஜூலை,07,2015. Guayaquil நகரத்தில் இயேசு சபையினரின் புனித சேவியர் கல்வி மையம் 1956ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இம்மையத்தில், ஏறக்குறைய இருபது இயேசு சபை அருள்பணியாளர்களுடன் மதிய உணவை அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கு வாழ்ந்து வரும் தனது பழைய நண்பரான 91 வயது இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர் Francisco Cortes அவர்களை முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தார் திருத்தந்தை. இயேசு சபை நவதுறவியர் பயிற்சியாளராக இருந்த இக்குருவிடம் இறையியல் கற்பதற்காக குருமாணவர்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அச்சமயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டின்  இயேசு சபை மாநில அதிபராகப் பணியாற்றினார். இக்கல்வி மையத்தில் தனது இயேசு சபை அருள்பணியாளர்களுடன் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் உரையாடி மகிழ்ந்தார். இத்திங்களன்று தனது 49வது வயதை நிறைவு செய்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்பாதரோ அவர்கள் கேக் வெட்டியபோது, ஒரு மெழுகுதிரியையாவது கொண்டு வாருங்கள் என்று திருத்தந்தை சொல்லி விழாவுக்கு மெருகூட்டினார். தனது இயேசு சபை சகோதரர்களுடன் இருந்த மகிழ்வில் மதியம் ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் திருத்தந்தை. பின்னர் அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Guayaquil பன்னாட்டு விமான நிலையம் சென்று கிட்டோ நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.