2015-07-04 15:45:00

இலத்தீன் அமெரிக்கா, நம்பிக்கையின் கண்டம்


ஜூலை,04,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈக்குவதோர், பொலிவியா, மற்றும் பராகுவாய் நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருஅவைக்கும், உலக அரசியலுக்கும் இலத்தீன் அமெரிக்கா புதிய உந்துதலை வழங்க இயலும் என்று கூறினார்.

இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு, இலத்தீன் அமெரிக்கா, நம்பிக்கையின் கண்டம் என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் குறிப்பிட்டுள்ளதையும், இக்கூற்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி குறிப்பிட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார் கர்தினால் பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று தொடங்கும் திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தில் இவ்வெள்ளியன்று நீண்ட நேரம் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் மட்டங்களில் மாற்றங்கள் இடம்பெற்றுவரும் இலத்தீன் அமெரிக்கக் கண்டம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கண்டம் என்றும், ஒருபக்கம் உலகப் பொருளாதாரக் கொள்கையோடும், மறுபக்கம் உலகப்போக்கோடும் வளர்ந்துவரும் கண்டமாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.