2015-07-02 15:25:00

திருத்தந்தை - உலகின் அனைத்து அரசுகளுக்காகச் செபிப்போம்


ஜூலை,02,2015. “நமக்கு ஒரு மாபெரும் சவால்:அனைத்து மனிதரும் மகிழ்வுடன் அனுபவிக்கும் பொருட்டு, இறைவன் நம்மிடம் ஒப்படைத்துள்ள தோட்டத்தை அழிப்பதை  நிறுத்துவோம்”என்ற வார்த்தைகளை, இவ்வியாழனன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், உலகின் அனைத்து அரசுகளுக்காகவும், இலத்தீன் அமெரிக்க கிறிஸ்தவர்களுக்காகவும் இந்த ஜூலை மாதத்தில் நாம் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் வேட்பாளர்கள் குறித்த செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் மற்றும் ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம் இடம்பெறவுள்ள இந்நாள்களில், இந்த இரு நிகழ்வுகளையும் ஆண்டவர் திருமுன் கொணர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது ஜூலை மாத பொது மற்றும் மறைபோதகக் கருத்துக்களில் இவ்விரு நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, நாடுகளின் அரசியலுக்காகச் செபிக்கக் கேட்டுள்ளார்.

எல்லா நிலைகளிலும் அதிகமான அளவில் பிறரன்பு இடம்பெறட்டும் என்றும், இலத்தீன் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள், ஏழைகள் மீது அன்பு செலுத்துவதற்குச் சாட்சிகளாக வாழுமாறும், உடன்பிறப்பு உணர்வு மிகுந்த சமுதாயத்தைச் சமைப்பதற்குத் தங்களின்     பங்களிப்பை வழங்குமாறும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.