ஜூன்,30,2015. வருகிற ஜூலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரைகளும், மற்ற எந்தப் பொது நிகழ்வுகளும் இடம்பெறாது, ஆயினும், ஜூலை 3ம் தேதி அருங்கொடை இயக்கத்தினர் சந்திப்பு மட்டும் இடம்பெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் புதன் பொது மறைக்கல்வியுரைகள் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் என்றும், ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைகள் வழக்கம்போல் இடம்பெறும் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை விசுவாசிகளுக்கு நிறைவேற்றும் திருப்பலி, வருகிற ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறாது. இத்திருப்பலி மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் என்றும் திருப்பீடம் தெரிவித்துள்ளது.
மேலும், “நம்மைக் காப்பாற்றும் மற்றும் நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் இறைவனின் அன்பை ஒவ்வொருவருக்கும் அறிவிப்பது எத்துணை வியப்புக்குரியது” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |