2015-06-30 12:37:00

கடுகு சிறுத்தாலும் – செபத்தின் எடை


மளிகைக்கடை முதலாளியிடம் ஓர் ஏழைப்பெண் வந்து, தன் குடும்பத்திற்கு அன்றிரவு மட்டும் உணவு செய்யத் தேவையான பொருள்களைக் கடனாகத் தரும்படி கெஞ்சினார். அப்பெண்ணின் கணவர் உடல்நலமின்றி, வேலைக்குப் போகமுடியாமல் இருந்தார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள். அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக பட்டினியால் தவித்தனர். உதவி கேட்ட அப்பெண்ணை, அவ்விடத்தைவிட்டுத் துரத்திக் கொண்டிருந்தார் கடை முதலாளி.

கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்த வந்த ஒருவர், இந்தக் காட்சியைக் கண்டு மனமிரங்கி, அந்த முதலாளியிடம், "அந்தப் பெண்ணுக்குத் தேவையானதைக் கொடுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தருகிறேன்" என்று சொன்னார். முதலாளி சலிப்புடன் அந்தப் பெண்ணிடம், "சரி, உனக்குத் தேவையான பொருள்களை இந்தக் காகிதத்தில் எழுதி, தராசில் வை. அந்தக் காகிதத்திற்கு ஈடான எடைக்கு நான் பொருள்களைத் தருகிறேன்" என்று ஏளனமாகச் சொன்னபடி, அப்பெண்ணிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். காகிதத்தைப் பெற்றுக்கொண்ட அப்பெண், ஒரு நிமிடம் கண்களை மூடி செபித்தார். பின்னர், அந்தக் காகிதத்தில் வேகமாக எதையோ எழுதி, தராசில் அக்காகிதத் துண்டை வைத்தார். காகிதம் வைக்கப்பட்ட தராசுத்தட்டு கீழிறங்கியது. இதைப் பார்த்த முதலாளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. உதவி செய்ய வந்திருந்தவரும் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

"சரி, உனக்குத் தேவையானப் பொருள்களை மற்றொரு தட்டில் வை" என்று எரிச்சலுடன் சொன்னார் முதலாளி. தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், ஆகியவற்றை அந்தப் பெண் அடுத்தத் தட்டில் வைத்தார். அவர் எவ்வளவு வைத்தாலும், காகிதம் வைத்திருந்த தட்டு மேலே எழவில்லை. அந்தப் பெண் தராசில் வைத்த பொருள்களைக் கட்டி, வேண்டா வெறுப்பாக அவரிடம் கொடுத்தார் முதலாளி. அருகில் இருந்தவர், ‘தான் கண்ட இப்புதுமைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்’ என்று சொல்லியபடியே, மகிழ்ச்சியுடன் அதற்கு உரிய பணத்தையும் கொடுத்தார். அந்த ஏழைப்பெண் சென்றபின், கடை முதலாளி தராசை சோதித்தபோது, அது பழுதடைந்து விட்டதென்பதைப் புரிந்துகொண்டார். பின்னர், அந்த ஏழைப்பெண் தராசில் வைத்த காகிதத் துண்டை எடுத்துப் பார்த்தார், முதலாளி. அந்தக் காகிதத்தில், பொருள்களின் பட்டியல் எதுவும் எழுதப்படவில்லை. மாறாக, அப்பெண் காகிதத்தில் ஒரு சிறு செபத்தை எழுதியிருந்தார். "இறைவா, எங்கள் தேவை என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் தேவையை நிறைவு செய்தருளும்" என்பதே அந்தச் செபம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.