2015-06-29 15:39:00

இலத்தீன் அமெரிக்கத் திருப்பயணத்திற்காகச் செபிக்க வேண்டுகோள்


ஜூன்,29,2015. உரோம் நகரின் பாதுகாவலர்களான திருத்தூதர்கள் புனித பேதுரு, பவுல் பெருவிழாவான இத்திங்கள் நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது இலத்தீன் அமெரிக்கத் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய நாடுகளுக்கு வருகிற ஜூலை 5 முதல் 13ம் தேதி வரை தான் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தில் செபத்தின் வழியாகத் தன்னோடு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

நீங்கள் கற்பனை செய்வது போன்று, எனக்கு மிகவும் விருப்பமான இலத்தீன் அமெரிக்கக் கண்டப் பயணத்தை நம் ஆண்டவர் ஆசிர்வதிக்குமாறு செபிக்கவும் கூறினார் திருத்தந்தை.   

ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய நாடுகளின் என் அன்பு மக்கள் சிறப்பான முறையில் இத்திருத்தூதுப் பயணத்திற்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அன்னை மரியா நம்மோடு துணைவருவார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.