2015-06-25 16:54:00

பிலடெல்பியா அனைத்துலக குடும்ப மாநாட்டின் விவரங்கள்


ஜூன்,25,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள அனைத்துலக குடும்ப மாநாட்டின் தயாரிப்பாக, இவ்வியாழனன்று திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், திருஅவை அதிகாரிகளுடன், ஒரு முதிய தம்பதியரும் உரையாற்றினர்.

செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல், 27ம் தேதி முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியாவில் இடம்பெற உள்ள அனைத்துலகக் குடும்ப மாநாட்டையொட்டி, திருப்பீட குடும்பப்பணி அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia, பிலடெல்பியா மறைமாவட்டத்தின் பேராயர், Charles Joseph Chaput, துணை ஆயர், John McIntyre, அம்மறைமாவட்டத்தில் 50 ஆண்டு திருமண வாழ்வைச் சிறப்பித்துள்ள Jerry மற்றும் Lucille Francesco தம்பதியர் ஆகியோர் இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருஅவை மற்றும் சமூகத்தின் மையமாக விளங்கும் குடும்பங்களின் சாட்சிய உரைகள், பிலடெல்பியா கருத்தரங்கில் இடம்பெறும் என்றும், இறுதி நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித லூக்காவின் நற்செய்தியை, ஓர் அடையாளமாக, ஐந்து கண்டங்களில் இருந்து வரும் ஐந்து தம்பதியருக்கு வழங்குவார் என்றும் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 11,821 பேர், பிலடெல்பியா அனைத்துலகக் குடும்ப மாநாட்டில் பங்கேற்கப்போவதாக பதிவு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.