2015-06-25 16:36:00

திருத்தந்தை : குறைவாகப் பேசி, அதிகமாகச் செவிமடுங்கள்


ஜூன் 25,2015. மேய்ப்புப் பணியில் ஈடுபடுவோர் குறைவாகப் பேசி நிறைவாகச் செவிமடுப்பவர்களாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘எடுத்துரைத்தல், செயல்படுதல், செவிமடுத்தல்' என்ற மூன்று வார்த்தைகளை மையமாக வைத்து கருத்துக்களை வழங்கினார்.

'ஆண்டவரே, ஆண்டவரே என்று தன்னை அழைப்பவர் எல்லாரும் இறையரசில் நுழைய முடியாது’ என இயேசு கூறிய வார்த்தைகளை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலர் எடுத்துரைக்கின்றனர், செயல்படுகின்றனர், ஆனால், இறைவார்த்தைக்கு செவிமடுக்காததாக அவர்களின் செயல்பாடுகள் உள்ளன என்றார்.

என் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் பாறை நிலத்தின்மீது வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவர் என இயேசு கூறியதையும் மேற்கோள்காட்டி, செவிமடுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், திருத்தந்தை.

நாம் எவ்வளவுதான் சிறந்த செயல்களை ஆற்றினாலும், செவிமடுப்பதற்குரிய திறந்த மனதைக் கொண்டிராவிடில், அதனால் பயனில்லை எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுத்து, அதை பாறையாகக்கொண்டு அதன்மீது நம் வீட்டைக் கட்டுவோம் என்றார்.

இறைவார்த்தைக்கு செவிமடுத்து அதன்வழி செயலாற்றிய அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டையும் தன் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.