2015-06-25 16:19:00

அமெரிக்க யூத அமைப்பினருக்கு திருத்தந்தையின் பாராட்டு


ஜூன்,25,2015. அண்மைக் காலங்களில் யூத மதத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் இடையே சரியான புரிதல் இடம்பெறுவதற்கு, B’nai B’rith International எனப்படும் அமெரிக்க யூத அமைப்பு ஆற்றியுள்ள பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த யூத சமுதாயத்திற்கு உதவுவதற்கென்று 1843ம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பின் அனைத்துலகப் பிரதிநிதிகள் குழுவை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

வாழ்வையும், படைப்பையும் மதித்தல், மனித மாண்பு, நீதி, ஒருமைப்பாடு போன்ற துறைகளில், யூத மற்றும் கத்தோலிக்க மதத்தினர் ஒன்றிணைந்து உழைப்பது, சமூக முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் நாம் ஆற்றும் சேவையாக இருக்கும் என்று திருத்தந்தை கூறினார்.

திருத்தந்தையர், புனித 23ம் யோவான், புனித 2ம் யோவான் பவுல் ஆகியோர் யூதர்களுடன் கொண்டிருந்த நல உறவையும், இரண்டாம் உலகப் போரின்போது, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் பல யூதர்களைக் காப்பாற்றியதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஏனைய மறைகளோடு திருஅவைக்கு உள்ள உறவு பற்றிய அறிக்கையான, Nostra Aetate என்ற கிறிஸ்தவ மடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் நினைவுறுத்தினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.