ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னர் ஆண்டு வந்தார். அவர், ஒரு நாள் வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலாச் சென்றார். அந்நாட்களில் வாகனங்கள் எதுவும் இல்லாததால், பல இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று. தனது பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த மன்னர், தன் கால்களில் கடுமையான வலியை உணர்ந்தார். இதுதான் அவர் அதிகமான தூரம் நடந்து சென்ற முதல் பயணம் என்பதாலும், அவர் சென்று வந்த பகுதிகள் பல, கரடுமுரடாக இருந்ததாலும், கால்வலியை அவரால் தாங்கவே முடியவில்லை.
இந்நிலையில், மன்னர் ஓர் ஆணையிட்டார். அதாவது, "இந்நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளையும் விலங்கின் தோலைக் கொண்டு பரப்பி விடவேண்டும்" என்பதே மன்னர் இட்ட ஆணை. இதனை நிறைவேற்றுவதற்கு ஏராளமான விலங்குகளை கொல்ல வேண்டி வரும், மேலும் இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனை உணர்ந்த மன்னரின் பணியாளர் ஒருவர், மிகுந்த பணிவுடன் மன்னரிடம் சென்று, நீங்கள் கூறியபடி, நகரம் முழுவதையும் தோலால் பரப்பினால், ஏராளமான பொருட்செலவாகும். உங்கள் ஒருவருக்காக இப்படி நகரத்தையே மாற்றுவது தேவையில்லாத செலவு. அதற்கு பதிலாக நீங்கள் மிகவும் மிருதுவான ஒரு தோலைக் கொண்டு காலணி செய்து கொள்ளலாமே என்று ஆலோசனைக் கூறினார். ஆச்சரியத்தில் மூழ்கிய மன்னர், இறுதியாக தனது பணியாளரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தனக்காக ஒரு காலணியை தயாரிக்க சொன்னார்.
இந்த பூமியை மிகவும் மகிழ்ச்சியான உலகமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும், அதற்காக நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமேத் தவிர, இந்த உலகத்தை அல்ல.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |