2015-06-17 15:52:00

பிரேசில் நாட்டில் புலம் பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் வாரம்


ஜூன்,17,2015. 'பணிபுரியவே வந்தேன், பணி பெறுவதற்கன்று' என்று இயேசு தன் பணியைக் குறித்து கூறியதோடு மட்டுமல்லாமல், அதையே தன் சீடர்களின் பணிக்கும் மையமானப் பொருளாக வழங்கினார் என்று பிரேசில் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

பிரேசில் ஆயர் பேரவை, ஜூன் 14, கடந்த ஞாயிறு முதல், 21, வருகிற ஞாயிறு முடிய, புலம் பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் வாரத்தைக் கடைபிடிக்கும் தருணத்தில், இப்பேரவையின் மேய்ப்புப்பணி அவை தலைவர், ஆயர் José Luiz Ferreira Sales அவர்கள் இவ்வாறு கூறினார்.

'முற்சார்பு எண்ணங்கள் வேண்டாம், உரிமைகளும் பங்கேற்பும் வேண்டும்' என்ற கருத்தில் கடைபிடிக்கப்படும் புலம் பெயர்ந்தோர் வார நிகழ்வுகள், பிரேசில் நாடெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளை அனைவரும் புரிந்துகொள்ள உதவும் என்று ஆயர் சேல்ஸ் அவர்கள் Fides செய்திக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Fraternity Campaign என்ற குழுவினர், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி, பிரேசில் நாட்டில் நடத்தும் இந்தச் சிறப்பு வாரம், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.