2015-06-17 15:34:00

திருத்தந்தையின் வருகையையொட்டி, தூரின் நகரில் இளையோர் மாநாடு


ஜூன்,17,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் இத்தாலியின் தூரின் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதையொட்டி, ஜூன் 19, இவ்வெள்ளி முதல், 22, வருகிற திங்கள் முடிய தூரின் உயர் மறைமாவட்டம், இளையோருக்கு சிறப்பு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தூரின் உயர் மறைமாவட்டத்தின் இளையோர் பணிக்குழுவும், சலேசியத் துறவு சபையும் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில் இளையோர் பெருமளவில் கலந்துகொள்ள, தூரின் பேராயர் சேஸரே நொசிலியா (Cesare Nosiglia) அவர்கள், சிறப்பான அழைப்பொன்றை  விடுத்துள்ளார்.

'Happening' அதாவது, 'நடைபெறுவது' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, சலேசியத் துறவு சபையை நிறுவிய புனித ஜான் போஸ்கோ அவர்கள் பிறப்பின் இரண்டாம் நூற்றாண்டையும் இணைத்துக் கொண்டாடுகிறது.

மாநாட்டில் கலந்துகொள்ளும் இளையோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 21, ஞாயிறன்று நிறைவேற்றும் திருப்பலியிலும், மாலை தலைமைத் தாங்கி நடத்தும் கூட்டத்திலும் கலந்துகொள்வர் என்று தூரின் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.