2015-06-17 15:32:00

கடுகு சிறுத்தாலும்.... : நம்மைப் போலவே நம் எண்ணங்களும்


மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவர் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த விறகுவெட்டி அவரைப் பார்த்தார். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்” என நினைத்துக் கொண்டே சென்றார்.

திருட்டுத் தொழில் செய்யும் ஒருவர் அடுத்ததாக, அவ்வழியாக வந்தார். “இரவு முழுவதும் கண்விழித்து திருடியிருப்பான் போலத் தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான்” என நினைத்துக்கொண்டே சென்றார்.

மூன்றாவதாக குடிகாரர் ஒருவர் அவ்வழியாக வந்தார். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றார்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர், முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகையச் செயலைச் செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே"

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.