2015-06-15 16:43:00

திருத்தந்தை : நம்பிக்கைக்கு உயிரளிக்கிறது இறையன்பு


ஜூன்,15,2015. சிறு விதையானது பெரிய மரமாக வளர்வதுபோல், சிறியனவாக இருப்பனவற்றையும், இறையன்பும், வாழ்வுதரும் வார்த்தைகளும் புளிக்காரமாகச் செயல்பட்டு, பெரியனவாக மாற்றுகின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விதைகள் முளைவிடுவது, மற்றும் கடுகு சிறியதாயினும் பெரிய மரமாக வளர்வது போன்ற உவமைகளை மேற்கோள்காட்டி இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உவமைகள் வழி, வாழ்வுதரும் இறைவார்த்தையின் வலிமை குறித்து இயேசு நமக்கு கற்பிக்க விரும்புகிறார் என்றார்.

இறைவனின் வார்த்தை நம்முள் வேரூன்றி முளைவிடுவதற்கு உதவும் நோக்கில், அவ்வப்போது நற்செய்தி வாசகங்களை வாசிக்கப் பழகவேண்டும், அதற்கு நாம் எப்போதும் கையடக்க விவிலியப் பிரதிகளைக் கொண்டிருப்பது அவசியம் எனவும் கூறினார் திருத்தந்தை.

இறையரசு என்பது இறைவன் நமக்கு வழங்கும் கொடை, அதற்கு நம் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எத்தனை இடர்பாடுகளைச் சந்தித்தாலும் இறையன்பு என்பது நம்பிக்கைக்கு உயிரளிப்பதாகச் செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.