2015-06-11 16:20:00

கனடா நாட்டுப் பிரதமர் ஹார்ப்பர், திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூன்,11,2015. ஜூன் 11, இவ்வியாழன் காலை, கனடா நாட்டுப் பிரதமர், Stephen Harper அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருப்பீடத்திற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்தும், மதச் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் நிலைநிறுத்த, கனடா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மத்தியக் கிழக்குப் பகுதியிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் அமைதியைக் கொணர மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பின், கனடா பிரதமர், Harper அவர்கள், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்தார்.

மேலும், "எங்கு வேலையில்லையோ, அங்கு மாண்பும் இல்லை" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.