2015-06-09 15:54:00

தேர்தலில் ஊழல் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டுகோள்


ஜூன்,09,2015. 2016ம் ஆண்டில் பிலிப்பைன்சில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் ஊழலுக்குப் பெயர்போன அரசியல்வாதிகளைப் புறக்கணிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் தங்களின் மேய்ப்புப்பணி அறிக்கையில் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜூன்,07, கடந்த ஞாயிறன்று பிலிப்பைன்சின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும் வாசிக்கப்பட்ட ஆயர்களின் இவ்வறிக்கை, ஓட்டுப்போடுதல் வெறும் அரசியல் உரிமை மட்டுமல்ல, இது அறநெறி சார்ந்த கடமையும் ஆகும் என்று வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

உரிய காலத்திற்கு முன்னரே நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்திற்கெதிரான சட்டத்தை முறியடிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அரசியல்வாதிகள் திட்டமிட்டுவரும் இவ்வேளையில், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்களின் மனச்சான்றுகளை உருவாக்கும் கடமையிலிருந்து திருஅவை ஒதுங்கி நிற்காது எனவும் பிலிப்பைன்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.

வாக்குச்சீட்டுக்காகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்காக அல்ல, சமூகத்தையும், நாட்டையும் வழிநடத்தும் மனிதர்மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்ற சரியான காரணங்களுக்காக ஓட்டியளியுங்கள் என்றும் ஆயர்களின் அறிக்கை குடிமக்களிடம் கூறியுள்ளது.

அரசு அதிகாரத்தை நிரந்தரமாக வைத்திருக்க விரும்பும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்காமல் இருப்பதன்மூலம் குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.