2015-06-09 16:06:00

தென் சூடான் கிறிஸ்தவ சபைகளின் அமைதித் திட்டம்


ஜூன்,09,2015. போரினால் பாதிக்கப்பட்டுள்ள தென் சூடானில் அமைதியைக் கொண்டு வருவதற்கு அரசியலில் எவ்வித ஆர்வமும் காட்டப்படாமல் இருப்பதால், தாங்கள் அமைதி நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் அறிவித்துள்ளன.    

தென் சூடானின் ஜூபா கத்தோலிக்கப் பேராயர் Paulino Lukudu Loro அவர்கள் உட்பட, தென் சூடான் கிறிஸ்தவ சபைகள் அவையின் 25 பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ருவாண்டா நாட்டில் நடத்திய ஒரு வாரக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தென் சூடானில் அமைதி மற்றும் ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் தனியாக, திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாக, அனைத்துலக சமுதாயத்துக்கும், குடி மக்களுக்கும் அறிவித்துள்ளன.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 2005ல் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின்படி, 2011ம் ஆண்டில் தென் சூடான், சூடானிலிருந்து சுதந்திரம் அடைந்தது.

ஆயினும், தென் சூடானில் 2013ம் ஆண்டில் மீண்டும் போர் தொடங்கியது. இதில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.