2015-06-05 16:03:00

வீடற்றவர்களின் தூரின் திருப்பயணத்துக்கு திருத்தந்தை உதவி


ஜூன்,05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் நிதியுதவியைக் கொண்டு உரோம் நகரின் பங்கு ஒன்று, வீடற்ற மற்றும் ஏழை மக்கள் என, ஐம்பது பேரை இத்தாலியின் தூரின் நகருக்குத் திருப்பயணமாக அழைத்துச் சென்றுள்ளது.

கடந்த ஏப்ரலிலிருந்து தூரின் நகரில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும், இயேசுவின் திருஉடலை மூடியிருந்த போர்வையைப் பார்ப்பதற்காக 50, வீடற்ற மற்றும் ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உரோம் நகரிலிருந்து ஏறக்குறைய 430 மைல் தூரத்திலுள்ள தூரின் நகருக்குச் செல்லும் இந்த ஏழைகளுக்கு உணவுக்கும் தங்குமிட வசதிக்கும் திருத்தந்தை உதவியுள்ளார். இதே போல், மற்றுமொரு பங்குக்கும் திருத்தந்தை உதவியுள்ளார்.

இம்மாதம் 21,22 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூரின் நகருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்குத் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், அத்தயாரிப்பின் ஒரு கட்டமாக இவ்வாறு திருத்தந்தை ஏழைகளுக்கு உதவி வருகிறார் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.