2015-06-04 15:09:00

கடுகு சிறுத்தாலும் – பழக்கங்களுக்கு அடிமையாவது ஆபத்து


ஒரு நாள் ஒருவர் தனது வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதுவரை அவர் கண்ணில்படாத மிகப் பழைய புத்தகம் ஒன்றைக் கண்டார். அதன் பக்கங்கள் மஞ்சள் படிந்து உதிரத் தொடங்கியிருந்தன. அதனால் அப்பக்கங்களை மிகக் கவனமாகத் திருப்ப வேண்டியிருந்தது. அவர் அந்தப் புத்தகத்தை எத்தனையோ முறை வாசிக்க முயன்றும், ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே அது மாய மந்திரங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டார். அந்தப் பத்தியில், கருங்கடல் கரையில் கிடக்கும் மாயசக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும், அதை அது தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக்கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம். இதைத் தெரிந்து கொண்ட அந்த மனிதர், இருப்புக் கொள்ளாமல், கருங்கடல் நோக்கி உடனே புறப்பட்டார். அங்குத் தினமும் காலையிலிருந்து மாலை வரை அவர் ஒவ்வொரு கல்லாய்த் தொட்டுப் பார்த்து தேடத் துவங்கினார். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. ஒரு முறை சோதித்த கல்லை மறுபடியும் மறுபடியும் சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று சிந்தித்து, ஒவ்வொரு கல்லாகக் கடலுக்குள் எறிந்து கொண்டிருந்தார். இப்படி பல ஆண்டுகள் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, ஆனால் கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறிவது மட்டும் அனிச்சை செயல்போல் அவருக்கு ஆகி விட்டது. ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும்போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவர் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தார். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல ஆண்டுகள் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் கடலில் தூர எறிந்து விட்டார். ஆம். செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை (நன்றி ஈகரை.காம்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.