2015-06-03 17:11:00

லெபனான், ஈராக் நாடுகளில், மிலான் பேராயர், கர்தினால் ஸ்கோலா


ஜூன்,03,2015 மிலான் பேராயர், கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அவர்கள், ஜூன் 16ம் தேதி முதல், 20ம் தேதி முடிய லெபனான் மற்றும் ஈராக் நாடுகளில் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளில் துன்புறும் மக்களுக்கு நிதி உதவிகள் செய்வார் என்று மிலான் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

லெபனான் மற்றும் ஈராக் நாடுகளின் மக்கள் அடைந்துவரும் துன்பங்களைத் துடைக்கும் நோக்கத்துடன், மிலான் உயர் மறைமாவட்டத்தில் திரட்டப்பட்ட நிதி உதவியை, கர்தினால் ஸ்கோலா அவர்கள், அந்நாடுகளின் மக்களுக்கு வழங்க இப்பயணத்தை மேற்கொள்வார்.

மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால், Bechara Boutros Rai அவர்களும், கல்தேய வழிபாட்டு முறை, முதுபெரும் தந்தை, பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களும் விடுத்த அழைப்பின்பேரில், கர்தினால் ஸ்கோலா அவர்கள் இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ISIS அடிப்படைவாத இஸ்லாமிய அரசின் வன்முறைகளால், கடந்த ஆண்டில் மட்டும், ஈராக் நாட்டில், 1,25,000 கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகள் அனைத்தையும் இழந்து, அடுத்தவரின் உதவிகளை எதிர்நோக்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஈராக் காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.