2015-06-03 16:17:00

கடுகு சிறுத்தாலும் – அவசியமற்ற வார்த்தைகளைத் தவிர்த்தால்...


அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு. அதன்பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்தச் சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார். அதற்குச் சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில்தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்குமுன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல்தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். தங்கள் பார்வையில் இது தடைக்கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளைப் பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார் சிற்பி.

ஆம். நாமும் வாழ்வில் தேவையற்ற வார்த்தைகளை நீக்கினால் விலைமதிப்பற்ற மனிதராய் வாழ்ந்து காண்பிக்கலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.