ஜூன்,01,2015 கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே உருவாகும் காதல் கதை, தோல்வியின் கதைபோலத் தோன்றினாலும், மனிதர்களின் வலுவின்மையைக் கொண்டே இறைவன் கட்டியெழுப்புகிறார் என்பதே உண்மை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 1, இத்திங்களன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியின்போது, மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை மையப்படுத்தி மறையுரை வழங்கினார், திருத்தந்தை.
அழகியத் திராட்சைத் தோட்டத்தை உருவாக்கி வழங்கும் உரிமையாளருக்கு எதிராக, குத்தகைக்காரர்கள் கொலை செய்யத் துணிந்தாலும், அந்த மரணங்களே மீட்பைக் கொணரும் வழிகளாக அமைந்தன என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
நமது வாழ்வையும் திருப்பிப் பார்க்கையில், நம்மைச் சந்திக்க வந்த இறை வாக்கினர்களையும், இறுதியில் இயேசுவையும் நாம் பல முறை நம் வாழ்விலிருந்து தூக்கி எறிந்துள்ளோம் என்பதை உணரலாம் என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
நமது மீட்பின் பாதை, பல தோல்விகளால் நிறைந்தது என்றும், இத்தோல்விகளின் சிகரமாக சிலுவை என்ற பெரும் இடறல் இருந்தாலும், இறுதியில் வென்றது அன்பே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |