2015-05-29 15:41:00

திருத்தந்தை, சுலோவேனியப் பிரதமர் சந்திப்பு


மே,29,2015. சுலோவேனியா குடியரசின் பிரதமர் Miro Cerar அவர்கள், இவ்வெள்ளி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், அதன்பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும் சந்தித்து உரையாடினார்.

திருப்பீடத்துக்கும், சுலோவேனிய நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றியும், தேசிய ஒப்புரவு, மனித-மத விழுமியங்கள், சமுதாயத்தின் மற்றும் ஏழைகளின் பொது நலனை ஊக்குவித்தல் உட்பட நாட்டின் பொது நலனில் தலத் திருஅவையும், நாடும் சேர்ந்து செயலாற்றிய வேண்டிய விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அட்ரியாட்டிக் கடற்கரையில் அமைந்துள்ள சுலோவேனியா, மலைகள் மிகுந்த நாடாகும். ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் வர்த்தகப் பாதைகள் சந்திக்கும் முக்கிய இடமாகவும் இந்நாடு உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.