2015-05-28 15:54:00

திருத்தந்தை, குரோவேஷிய அரசுத்தலைவர் சந்திப்பு


மே,28,2015. குரோவேஷிய குடியரசுத் தலைவர் Kolinda Grabar-Kitarović அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், அதன்பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும் இவ்வியாழனன்று சந்தித்து உரையாடினார்.

திருப்பீடத்துக்கும், குரோவேஷிய நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றியும், நாட்டின் பொது நலனில், குறிப்பாக, குடும்பம் மற்றும் இளையோரின் நல்வாழ்வில்  குரோவேஷியாவும், தலத்திரு அவையும் இணைந்து ஆற்றிவரும் பணிகள் பற்றியும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

தற்போதைய பொருளாதார உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவை முன்வைக்கும் சவால்கள் பற்றியும், போஸ்னியா-எர்செகோவினா குடியரசிலுள்ள குரோவேஷிய மக்களின் நிலை குறித்தும் இச்சந்திப்புக்களில் இத்தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

இன்னும், "கிறிஸ்தவர்கள், கோட்பாட்டுக்கு அல்ல, ஆனால் ஒரு மனிதருக்குச் சாட்சிகள்; இந்த மனிதரே கிறிஸ்து, எல்லாருக்கும் ஒரே மீட்பராகிய கிறிஸ்து உயிர்த்துவிட்டார் மற்றும் வாழ்கிறார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.