2015-05-26 16:13:00

வயதான நம் பெற்றோரை அன்புடன் சந்திக்கச் செல்லுங்கள்


மே,26,2015. "வயதான நம் பெற்றோரை அன்புடன் சந்திப்பதன் மூலம் இறைவனின் நான்காவது கட்டளையை நாம் கடைப்பிடிக்க முடியும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியானது.

ஒன்பது மொழிகளில் வெளியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி, தந்தை தாயை மதிப்பாயாக என்ற இறைவனின் நான்காவது கட்டளையை மையப்படுத்தி, வயதான பெற்றோர் மீது பிள்ளைகள் காட்ட வேண்டிய அன்பை வலியுறுத்தியுள்ளது.

மேலும், குடும்பம் குறித்து வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் 24வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆயர்கள் ஆலோசனை அவையின் கூட்டம் இச்செவ்வாய் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இத்திங்களன்று தொடங்கிய இந்த இரண்டு நாள் ஆலோசனை அவையின் கூட்டத்தில் குடும்பம் குறித்த சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பு விவாதிக்கப்பட்டது.

திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும் பணியும் என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 4 முதல் 25 வரை வத்திக்கானில் 24வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.