2015-05-22 15:23:00

பேராயர் ரொமேரோ, அ.சகோ.ஐரின் முத்திப்பேறு பட்டம்


மே,22,2015. இறையடியார்கள் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, ஐரின் ஸ்தெஃபனி, ஆகிய இருவரும் மே 23, இச்சனிக்கிழமையன்று அவரவர் பணித்தளங்களில் அருளாளர்கள் நிலைக்கு உயர்த்தப்படவுள்ளனர்.

இத்தாலியரான அருள்சகோதரி Irene Stefani அவர்கள், தனது 20வது வயதில் தூரின் கொன்சலாத்தா மறைபோதக சபையில் சேர்ந்து Irene Stefani என்ற பெயரையும் ஏற்றார்.

1914ம் ஆண்டில் அச்சபையில் இறுதி வார்த்தைப்பாடுகளை எடுத்து, கென்யாவின் Mombasaவுக்குக் கப்பலில் புறப்பட்டார். ஈராண்டுகள் Nyeriல் தங்கி Kikuyu மொழியைக் கற்றார். அச்சமயத்தில் கென்யா, டான்சானியா ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளிலும் முதல் உலகப் போரில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களுக்கு உதவினார் அருள்சகோதரி Irene. இவர் தனது 39வது வயதில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.

மறைசாட்சியான பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வதோரின் Ciudad Barriosல் 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தார். 

இவர் தனது 13வது வயதில் சான் சால்வதோர் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராக நியமிக்கப்பட்டார். எல் சால்வதோர் நாட்டில் 1980களில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயத்தில் மனித உரிமை மீறல்களைக் கடுமையாய் இவர் கண்டித்தார். ஏழைகளுக்காகக் குரல் எழுப்பினார். இதனால் 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது வலது சாரி மரணப் படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் பேராயர் ரொமேரோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.