2015-05-22 15:29:00

தொழிற்சாலைகள் பூர்வீக இனத்தவரின் வளர்ச்சிக்கு முக்கிய தடை


மே,22,2015. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பூர்வீக இன மக்கள் வாழும் பகுதிகளில் இடம்பெறும் சுரங்க வேலைகளும், அதோடு தொடர்புடைய தொழிற்சாலைகளும் மக்கள் தொடர்ந்து புலம் பெயர்வதற்கும், அவர்களின் வறுமைக்கும் காரணமாகியுள்ளன என்று அம்மாநிலத்தின் திருஅவைத் தலைவர்கள் கூறினர்.

ஒடிசா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் Jharsuguda வில் இவ்வாரத்தில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட திருஅவைத் தலைவர்கள் இவ்வாறு கூறினர்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய சம்பல்பூர் ஆயர் Niranjan Sual Singh அவர்கள், சமுதாயத்தில் நீதி, அமைதி மற்றும் மாண்பைக் கொண்டுவர வேண்டுமெனில், சுரங்க வேலைகள் நடக்கும் சூழல்கள் குறித்து திருஅவை ஆய்வு நடத்துவது அவசியம் எனவும் கூறினார்.

வளர்ச்சி என்ற பெயரில் பூர்வீக இன மக்கள் புலம் பெயரும்போது, அவர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் தனித்துவம் அழிக்கப்படுகின்றன என்று இக்கருத்தரங்கில் சுட்டிக்காட்டிய, ஜார்க்கண்ட் மாநில சமூக ஆர்வலர் Dayamani Barla அவர்கள், இந்நிலையில் நம் சொந்தப் பூமியில் படைவீரர்கள் போன்று வாழ்கிறோம் என்று கூறினார்.

பூர்வீக இன மக்களின் மனித உரிமைகள், பூர்வீக இன உரிமைகள் மற்றும் நீதி கிடைப்பதற்குப் போராட வேண்டியது திருஅவையின் பொறுப்பும் கடமையும் எனவும் வலியுறுத்தினார் Barla.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.